Friday, May 2, 2014

அண்ணனுக்கு வயசாச்சு..!

(என் அண்ணனை பற்றி முதன்முதலாய் இன்று நான் எழுதியது.. அவனுக்கு வயசானதை(வதை) சிறுவனாய் கோபத்துடன் எதிர்க்கிறேன்..)

                  
உச்சி வகுடெடுக்கா தலை
நெத்தியில திட்டா திருநீறு
அளந்து ஊத்துன எண்ணெய்தலை
பென்சில் கோட்ட விட
கொஞ்சம் பெறுத்த உடம்பு
முன்னிரு பல் மோதி
சிங்கப்பல் வெளிய நிக்கும்

வாயெல்லாம் பொய் அவனுக்கு
ஏமாத்துதான் அவன் வேலை
வெளிய தெரியாது
பொய் அவன் சொல்வான்னு

ரதிமீனா பஸ்ஸ மெயின்ரோட்டில்
பாத்தேனு சொல்லுவான்
ராஜீவ் காந்தி பஸ்ஸ டவுண் பஸ்
முந்திச்சுனு சொல்லுவான்
'
செல்ஃப்' ஏறி காசெடுத்து ரஸ்னா
வாங்கித் தருவான்
பிடிபட்டு சிக்கயில எனை விட்டு
ஓடி மறைஞ்சு போவான்

அருணாச்சலம் படத்த எனைவிட்டு
திருச்சி மாமாவோட பார்த்தாலும் - நான்
ஒரு வாரம் காக்கா பிடிச்சும்
கதை சொல்லமாட்டேனு ஓடுனான்
தோட்டத்துல சாட்ச்சியில்லாம தனியா
கிரிக்கெட் ஆடயில - நான்
பவுலிங் போட்டு முடிச்சதும்
பாத்ரூம் வருதுனு ஓடிடுவான்

ஒளிஞ்சு பிடிச்சு விளையாடைல - நான்
எங்க போய் ஒளிவேன்னு அவனுக்கு
மட்டுந் தெரியும்
எப்பவும் எனக்கு எதிர்டீம் தான்
என்னை காட்டிக் கொடுக்க அவன் தான்

'UNDERTAKER'-
க்கு ஏழு உசுருனு கதை
சொன்னதும் அவன் தான்
'KANE'-
நிஜமாவே பேய்னு கதை
சொன்னதும் அவன் தான்

சைக்கில் அவன் தானா ஓட்டுனதும்
தண்டோரா போட்டுகிட்டே பின்னால - நானும்
ஓடுனது மறக்கல..
'
டபுள்ஸ்' ஏத்திட்டு என்னோட அவனும்
தெருவுல விழுந்ததும்..
எந்திரிச்சு 'கெக்கபிக்கனு' சிரிச்சு
தெருவுல சைக்கிலோட நடந்தது
நான் மறக்கல..

காக்கி உடுப்பு, கருப்பு 'பூட்', கையில
கோடாலி ஸ்கேலோட - அடுத்த ஊர்
காலேஜுக்கு - அவன் படிக்கப் போனது மறக்கல..

வெளியூர் வேலைக்குப் போய் - எனக்கு
சட்டை வாங்கியாந்தது மறக்கல..

ஏதேதோ சாதகம், பொண்ணு போட்டோ,
அண்ணண் போட்டோ - பலர் கை
மாறி வந்தது.... 'ஏன்-னு' தெரியல..

'
ஏன்-னு' நானும் யோசிக்கயில
மறந்தது என் புத்தி வந்தது,

'
அண்ணனுக்கு வயசாச்சு' - அவனோட
ஓடியாடி திரிஞ்ச 'எனக்கும் 24 வயசாச்சு'..


No comments:

Post a Comment