Friday, May 2, 2014

சேராநிலை (அ) பிரிவு..!

(ஒரு தலைக் காதல் கொண்ட தலைவன், தலைவியை இன்னுஞ் சேராது பிரிந்திருக்கும் நிலை பாடுபொருளாய் உள்ளது...)

சொல்லோடு பொருளில்லை
சொல்வதற்கு சொல்லில்லை
மருகிமருகி விழியெல்லை
வந்தடைய நிலையில்லை

வீதியிலே நன்முல்லை
காட்சியாகும் நிலையில்லை
விரிந்திட்ட விண்ணெல்லை
கரைந்திடும் வாய்ப்பில்லை

தனியாப்பு கவியில்லை
மீட்டாயாழ் இசையில்லை
தாரகையுந் தானில்லை
தன்னிலையும் எனக்கில்லை

நெஞ்சோடு நினைவில்லை
என்னோடு உயிரில்லை
பார்வையில் அவளில்லை
பண்ணோடும் சுருதியில்லை

இலக்கணம் இனியில்லை
இன்னமுதுத் தமிழில்லை
சொல்லரசி சொல்லில்லை
சொல்வதற்கு ஒப்பில்லை

கருங்கூந்தல் மலரில்லை - அவள்
காலடியின் நிழலில்லை
செவ்வாயில் சிரிப்பில்லை
தென்மதுரை செழிப்பில்லை


கழுத்தில் கோவையில்லை
நித்திலத்தில் பொழிவில்லை
தேவி அருகில்லை
தென்றலுந் தேவையில்லை


தேவாரத் தெளிவில்லை
தென்பொதிகை நிலவில்லை
இசையோடு இலயமில்லை
அற்றவனுக்(கு) அபயமில்லை

கண்ணோடு காந்தளில்லை
காண்பதெல்லாம் காட்சியில்லை
புலமையோடு புதுமையில்லை - புண்பட
இதயத்தில் இடமில்லை

குயிலோசை கேட்பதில்லை
குழலோசை பிடிப்பதில்லை
மாரோடு மங்கையில்லை
மயிர்க்காலுந் தூங்கவில்லை

ஒன்றோடு ஒன்றில்லை
ஒன்றாகாவிடில் ஒன்றுமில்லை
வாழ்வோடு அவளில்லை
வாழ்வதற்கு வழியில்லை....


No comments:

Post a Comment