Friday, May 2, 2014

குழந்தைகள்...

இவர்கள் துறவிகள் - ஆசைப்படும்
அழகிய துறவிகள்...
பேதமின்றி எல்லாம் சமமாய்
பார்க்கும் ஆசைகொண்ட துறவிகள்...
பாவம்,
ஆசைமீறிவிடுவதால் மனிதனாகிவிடுகிறார்கள்
வளர்ந்த பின்..

எதுவும் தெரியாதென்று
ஒப்புக் கொள்ளும் விஞ்ஞானிகள்,
உன்னை என்னைப் போல்
தெரியுமென்று கண்மூடி
அறிவுக்கதவு அடைத்தவர்களல்லர்..
தெரியாதென்று தெரியவிளையும்
ஆசை படிப்பாளிகள்...

யோசித்ததுண்டா?
நீ உன் தேடல் நிறுத்தியதால்,
குழந்தைகளின் கேள்விக்கு தடைவிதித்ததை?

வழிந்து நிறையும் - வானமழையில்
நோய் மறந்து ஆடும்
தேவதைகள்...
வரப்போகும் இசிவின் இஷ்டமின்றி
விளையாடும் தெய்வங்கள்...

தூக்கத்திலும் தோழமை
விடாமல் ஆடிப்பாடி
கனவிலும் கவலையில்லா,
ஆசைப்படும் துறவிகள்...

அந்தச் சிரிப்பு - சிரிப்பு
மாத்திரம் கொண்டது...
நேற்று 'கா' விட்ட எதிரியுடன்
இன்று 'பழம்' விட்டு விளையாடும்
புண்ணிய ஆத்மாக்கள்...

நேற்றைய பேச்சில்லை,
நாளைய நினைப்பில்லை - இன்று
இக்கணம் வாழும் - 'ஜென்
சித்தாந்தத்தின்' துடிப்புள்ள
முழு உதாரணம்...

கனவில் அழுவது - கஷ்டத்தால்
இல்லை,
அவர்கள் விளையாட்டின் - மீதான
உங்கள் தடை உத்தரவால்...
நிஜத்தில் அழுவது - பிடிவாதத்தால்
இல்லை,
தங்களின் பிடித்த மடி - உங்களின்
வேலைகளால் தூரப் போவதால்...



குழந்தைகள் எல்லாம் சமம் தான்,
மேகங்கள் போல்,
இது சிறிது, இது பெரிதென்று
கூற ஒவ்வுமோ?
அவர்கள் மழை மட்டுமே தருவர்
மகிழ்ச்சியாய் - அனைவருக்கும்....

அவர்கள் கனவு பெரிது,
புன்னகை உண்மை,
வாக்கு சுத்தம்,
சக்தி கடல்,
அறிவு மூங்கில்- உங்கள்
கனவு கொல்லப்பட்டதற்காய்
அவர்கள் கனவு
தடைசெய்யப்பட்ட பகுதி
ஆக வேண்டாம்...!

அவர்கள் அவர்களாய் இருக்கும்
வரை அவர்கள் புண்ணியாத்மாக்கள்..!
உங்களின் 'வாழ்வியல்' மேலேறினால்
கூழாங்கற்களின் கூட்டத்தில் தொலையும்
       'மாணிக்கப் பரல்கள்..'

No comments:

Post a Comment